அமைதி தந்த பரிசு !

காவேரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் கலவரம் நடந்த பொழுது தமிழகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை.

தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற லெட்டர் பேடு கட்சிகள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு தமிழகத்தின் பெயரை கெடுத்தன. ஆனால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி மு க மற்றும் அ தி மு க இரண்டும் பொறுப்புள்ள கட்சிகளாக செயல்பட்டு தமிழகத்தில் பெரிய வன்முறை சம்பவங்கள் செயல்படாமல் பார்த்துக்கொண்டன.

அன்று அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்திய வன்முறை ஆட்டத்துக்கு தமிழகம் துணை போகாததன் விளைவு இன்று தமிழகத்துக்கு சாதகமாக மாறியுள்ளது.

இது பற்றி இன்று தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள் கீழே.

  • ஏற்கெனவே வேறு சில நெருக்கடிகளால் தேக்கமடைந்திருந்த பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு சமீபத்திய கலவரம் அவற்றின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால், பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் சில பெங்களூருவை காலி செய்துவிட்டு, அமைதி தவழும் தமிழகத்திற்கு தங்களது நிறுவனத்தை மாற்றிவிடலாமா என்று யோசித்து வருகின்றன.
  • கலவர நேரத்தில் கர்நாடகாவில் உற்பத்தி செய்த பொருட்களை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் பல தொழில் நிறுவனங்கள் தவித்தன. அந்த நேரத்திலும் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். தமிழகத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் எந்த வித பாதிப்புமில்லை. இவையெல்லாம் முதலீட்டாளர்களை சிந்திக்க வைத்துள்ளது
படம்: கே பி என் பேருந்துகள் எரிக்கப்பட்டபொழுது
  • தொழில் தொடங்குவதற்கு அத்யாவசியமான தொழிலாளர் வளம், போக்குவரத்து வசதி, மூலப் பொருட்கள், சந்தைப்படுத்தும் வசதி போன்றவை தமிழகத்தில் நிறைந்துள்ளது
  • பெங்களூருவில் இதற்கு முன்பு இதே போன்ற வன்முறைகள் நடைபெற்ற போது, எந்தப் பிரச்சினையும் இன்றி செயல்பட்ட கர்நாடகா மாநில ஐடி நிறுவனங்களையும் இந்த முறை வன்முறை கும்பல் விட்டு வைக்கவில்லை. பெங்களூருவில் கோரமங்களா, சர்ஜாபூர், பன்னார்கட்டா, ஒயிட் ஃபீல்டு போன்ற பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். எனவே இங்குள்ள நிறுவனங்களை முற்றுகையிட்டு மிரட்டல்கள் விடுத்ததால் ஐடி வளாகங்கள் பல நாட்கள் மூடப்பட்டது

எத்தனை வன்முறைகள் நடந்தாலும் சட்டப்படியான தீர்ப்பே வெல்லும். எனவே என்றும் வன்முறைக்கு துணை போவது நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு தான். 

"பையச் சென்றால் வையம் தாங்கும்" 
                                                     - ஒளவையார் 

விளக்கம்: அவசரப்படாமல், ஆத்திரப்படாமல், யோசித்து அமைதியாக செயல்பட்டால் இந்த உலகம் நம்மை தாங்கி வாழ வைக்கும். 

அமைதி காப்போம் !

Comments