கல்யாணமாம் கல்யாணம் - சிறுகதை

தட புடலாக நடந்தது திருமண ஏற்பாடுகள். மைக் செட்டுகளும் தோரணங்களும் மண்டபத்தை அலங்கரித்தன. மாடர்ன் பிளக்ஸ் போர்டுகளில்  வருங்கால மாப்பிள்ளைகளின் முகங்கள் போட்டோஷாப் மென்பொருளின் கருணையில் ஜொலித்தன .

kalyanam


திருமணம், அதுவும்  சாதி மத பேதங்களில் மூழ்கிப்போன தமிழகத்தில் இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்ட கலப்பு திருமணம்.

போனவாரம் வரை இந்த திருமணம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. கூச்சல்கள் நிறைந்த இந்திய பாராளமன்றம் போல இருவர் வீட்டிலும் எதிர்ப்புகளுக்கும்  கூச்சல்களுக்கு பஞ்சமில்லை.

ஒருவழியாக இருவீட்டாரும் சம்மதித்து திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று அரங்கேறின. நாளை காலை திருமணம் , இன்று இரவு மாப்பிள்ளை பெண் ஊர்வலம் என திட்டமிடப்பட்டு ஊர்வலத்துக்கான நேரம் குறிக்கப்பட்டது.

நான் தயாராக இருந்தேன். அலங்கரிக்கப்பட்ட ஊர்வல வண்டியில் ஊர்வலம் ஏற, ஆராத்தி எடுத்து முடித்ததும் நல்ல நேரம் கார்ல ஏறுங்க என்று யாரோ சொல்ல, அலங்கரிக்க பட்ட வண்டியில் ஏறி இருவரும் அமர்ந்தோம் ..!

எனக்கு முன்னால் பேண்டு வாத்தியங்கள் முழங்கின. சினிமா நடிகரை பார்ப்பது போல் போவோர் வருவோர் ஊர்வல வண்டியை பார்த்தவண்ணம் சென்றனர். சிலர் என் காதுபட மாப்ள செம கலர்ல என்று சொல்வது கேட்டது.

மணப்பெண் வண்டியில் ஏற தயாராக இருந்தாள் . மனதுக்கு பிடித்தவளை கரம்பிடிக்கதான் எத்தனை போரட்டங்கள் ,எத்தனை தடைகள்.

சாதிய அமைப்புகள் ஆழமாக வேருன்றிய ஒரு சமுதாயத்தில், அடுப்படியை விட்டு அலுவலகம் நோக்கி செல்லும் முதல் தலைமுறை பெண்கள் , ஓடி போய் திருமணம் செய்தல் மாறி வீட்டில் பக்குவமாக பேசி காதல் திருமணங்களுக்கு சம்மதம் வாங்கும் இளம் தலைமுறை என மாற்றங்களுக்கு குறைவில்லை.

மாற்றம் ஒன்று தானே மாறாதது ?

சமுதாயத்தில் இன்னும் முழுவதும் ஏற்காத காதல் திருமணத்தை பெற்றோர் சம்மதத்துடன் நடத்துவது பெரிய சாதனை தான்.

மனதின் உறுதிக்கு தான் எத்தனை பலம் ! 

ஊர்வலம் நகர தொடங்கியது. வான வேடிக்கைகளுக்கும் பட்டாசுகளுக்கும் குறைவில்லை. போவோர் வருவோர் நின்று வேடிக்கை பார்த்தனர்.

இரண்டு வருடமும் தொலைபேசி கம்பெனி பங்குகள் படுத்துவிடாமல் பாதுகாக்க மணிகணக்கில் பேசியும் முடியாத கதைகள் இப்பொழுது பரிமாறப்பட்டன.

மண்டபம் நெருங்க நெருங்க வாகனத்தின் வேகம் குறைந்தது. ஆஹா இன்னும் சில அடி தூரங்கள் தான் இதோ மண்டபம், இருவருக்கும் மனதளவில் முடிந்த திருமணத்தை ஊர்கூடி சேர்த்து வைக்கும் வைபவம் நடக்க போகும் இடம்.வாசலில் கூட்டம் எங்களை வரவேற்க காத்திருக்கிறது.

மண்டபத்தின் வாசலில் கார் நின்றவுடன் எங்களை  கூட்டம் சூழ்ந்தது. போட்டோ ப்ளாஷ்கள் பளிச்சிட இருவரும் இறங்க தமிழர் மரபு படி ஆராத்தி எடுக்க, சுற்றத்தார் சூழ இருவரும் மண்டபத்துக்குள் பிரவேசித்தனர்.

இன்று இந்த ஜோடி அமர்ந்த இடத்தில் என்றாவது ஒருநாள் நானும் அவளும், சொன்னது மனம் !

அப்பொழுது ஒரு குரல் " டிரைவர் கார ஓரமா விடுப்பா "

மனதை தேற்றிக்கொண்டு நகர்த்தினேன் ஊர்வல வண்டியை ...!







Comments

  1. As usual the way you are writing is superb & interesting... Keep Rocking.... but it also in the same style as previous one..

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)